”எடுத்ததுமே எல்லா வேலையும் எனக்கு தெரியும் என்பது போல பாய்ஞ்சு பாய்ஞ்சு செய்துடாதே என்ன நான் சொல்வது கேக்குதா மரமண்டை போல் நிக்குறியே” என்று உலுக்கினாள் அம்மா....
”சரிம்ம்மா.... கிளம்பறோம் என்னை ஆசீர்வாதம் பண்ணு...”
”என் கண்ணே நீ இங்க எவ்ளோ சுதந்திரமா இஷ்டப்பட்டதை சாப்பிட்டு நிம்மதியா காலாட்டிக்கிட்டு இருந்தியே என் தங்கம்... இனி போகும் இடத்தில் எப்படி எல்லாம் இருப்பியோ கஷ்டப்படுவியோ தெரியலையே” என்று மூக்கு சிந்தினாள் அம்மா கற்பகம்....
”போதும் போதும் உன் போதனை முதல்ல மகளை நல்லதைச்சொல்லி அனுப்புவியா இப்படி பொல்லாப்பு விஷயங்களை உருவேத்தி அனுப்புறியே” என்று சங்கடப்பட்டார் சுந்தரம்....
இது எதுவும் கண்டும் காணாதபடி அமைதியாக தன் லேப்டாப்பில் வேலைகளை முடித்துக்கொண்டிருந்தான் ஸ்ரீநாத்....
மருமகளை வரவேற்கும் முயற்சியில் துரிதமாக இயங்கிக்கொண்டிருந்தாள் முத்துமணி கணவனை இழந்தததால் தான் சென்று முன்பில் நிற்கவேண்டாமென்று உறவுக்கார பெண்மணியை ஆரத்தி கரைக்க தயார் செய்ய சொன்னாள்...
கணவனை இழந்தப்பின் மகனை படிக்கவைக்க எல்லா சராசரி பெண்களைப்போலவே தானும் ஒற்றையாய் நின்று போராடி ஜெயித்து தாயின் அன்பில் உருகும் மகனை நல்லமுறையில் படிக்கவைத்து வெளிநாட்டில் கைநிறைய சம்பாதிக்கும் வாய்ப்பு வந்தபோதும் தன் தாய்நாட்டில் இருப்பதையே ஸ்ரீநாத்தும் விரும்பினான் இரண்டு காரணங்களால் ஒன்று தாய்மண்ணை விட்டு பிரிய இஷ்டமில்லாததால் இன்னொன்று தன் தாயை தன் தாய்நாட்டில் இருந்து பிரித்துச்செல்ல இஷ்டப்படாததால்....
”கார் வந்திருச்சு வாங்க வாங்க ஆரத்தி ரெடியா?” என்று எங்கிருந்தோ ஒரு கிழவி குரல் கொடுக்க புழுதியை கிளப்பிக்கொண்டு வந்து நின்றது கார் வீட்டருகே...
பெரிய மாளிகை போல் இல்லை என்றாலும் தோட்டம் நிறைந்த அழகு வீடாக தான் இருந்தது முத்துமணி கைவண்ணத்தில் உருப்பெற்ற செடிகொடிகள் மரங்கள் எல்லாமே கிருஷ்ணாவை நலம்விசாரித்தது இளங்காற்றை வீசி....
பறக்கும் தலைமுடியை அடக்கமாய் கையில் ஒதுக்கி அமைதியாக கீழிறங்கினாள் கிருஷ்ணா. பின்னே ஸ்ரீநாத்தும் இறங்கினான் லேப்டாப்பை விடாது கையில் எடுத்துக்கொண்டு....
சமையற்கட்டில் இருந்து எட்டி எட்டி தன் மருமகளின் மகனின் வரவை பூரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள் முத்துமணி....
ஆரத்தி கரைத்து எடுத்துக்கொண்டு வந்த பெண்மணியை தலைநிமிர்ந்து பார்த்து அத்தை எங்கே என்று சுற்றும் முற்றும் பார்த்தாள் கிருஷ்ணா...
”அட அவளெல்லாம் வரக்கூடாதும்மா நல்ல காரியத்துக்கு” என்று சொல்லிக்கொண்டே ஆரத்தி தட்டை சுற்றத்தொடங்கினாள் அந்த பெண்மணி..
கிருஷ்ணா தடுத்து நிறுத்திவிட்டு ”அம்மா எங்க இருக்கீங்க?” என்று குரல் கொடுத்தபோது அதிர்ச்சியுடன் முத்துமணி வந்து நின்றாள் கூச்சத்துடன்...
”எங்கள் வாழ்வு நல்லா இருக்கனும்னு நினைப்பதில் உங்களை விட மனம் நிறைந்து ஆசி தர யாரால் முடியும்? வாங்க நீங்க தான் ஆரத்தி சுத்தனும்” என்று அன்புடன் அணைத்து முன்பு இழுத்தாள் கிருஷ்ணா முத்துமணியை...
எல்லோரும் ஆ என்று வாய் பிளக்க கண்ணில் துளிர்த்த நீரை பெருமிதத்துடன் சுண்டி விட்டு ஆரத்தி சுற்றினாள் முத்துமணி...
ஆச்சர்யத்துடன் பார்த்தான் ஸ்ரீநாத்.....
வீட்டில் அங்கே மாமியார் கொடுத்த போதனை என்ன ஆனால் இவளென்னடான்னா என்று வியந்தான்....
உள்ளே வந்ததும் கூட்டம் நெம்பி தள்ளி புது மருமகளை எட்டி பார்த்தது....
முத்து மணி அவர்களை உட்காரவைத்துவிட்டு பால் பழம் கொண்டு வர ஓடினாள்...
”அம்மா இருங்க... முதலில் மாமனார் படத்திற்கு விளக்கேற்றிவிட்டு அதன்பின் சாப்பிடலாம்...” என்று சொன்னதும் முத்துமணி மனம் நெகிழ்ந்து போய் பார்த்தாள் தன் மருமகளை....
அக்கம் பக்கத்து வீட்டிலுள்ளோர் எல்லோரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர் இப்படி ஒரு காட்சியை தொலைக்காட்சியில் கூட கண்டு பழக்கமில்லாதோர் எப்படா மாமியார் மருமகள் சண்டை வரும் இடையில் போய் பஞ்சாயத்து செய்யலாம்னு காத்திருந்த கிழடுகள் எல்லோரும் வாயடைத்து போனர்...
இந்த காலத்தில் இப்படி ஒரு பொண்ணா என்று ஆச்சர்யப்பட்டனர்....
எல்லோரும் சாப்பிடும்போது மாமியாரை தன் பக்கத்திலேயே அமர்த்திக்கொண்டாள் கிருஷ்ணா...
சாப்பிட்டு முடித்ததும் எல்லோரும் ஆளாளுக்கு கிளம்ப பாத்திரங்கள் எல்லாம் அப்படியே கிடந்தது...
கிருஷ்ணா உடனே புடவையை இழுத்துக்கட்டிக்கொண்டு சாமான் எல்லாம் பர பரவென்று தேய்க்க ஆரம்பித்தாள்..
”உனக்கு ஏம்மா சிரமம் நீ போய் கொஞ்சம் ஓய்வெடு நான் செய்துப்பேன் தானே?” என்று தடுத்தாள் முத்துமணி...
மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு சொன்னாள், ”அம்மா நீங்களும் தானே களைப்பா இருக்கீங்க நீங்க ஓய்வெடுங்க” என்று....
இரவு மெல்லிய வெளிச்சத்தில் நறுமணத்துடன் வந்து அமர்ந்தாள் கிருஷ்ணா ஸ்ரீநாத் அருகே...
மெல்லிய இசையில் ”ஜெய க்ருஷ்ணா முகுந்தா முராரே” பாட்டு ஒலித்துக்கொண்டிருந்தது ரூமில்....
ஸ்ரீநாத் லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு அமைதியாக அவளைப் பார்த்தான்...
”என்ன பாக்குறீங்க?” என்று தலைகுனிந்தாள்..
”எனக்கு ஒரு விஷயம் புரியலை க்ருஷ்” என்றான்...
”என்னவாம்...?”
“உங்கம்மா கிளம்பும்போது உனக்கு சொன்னது என்ன ஆனால் நீ இங்க செய்வது” என்ன என்றான்...
”நீங்க நினைப்பது சரியே”....
”எல்லா அம்மாக்கள் எல்லா பொண்ணுக்கும் சொல்வதை தான் எங்கம்மாவும் சொன்னாங்க”...
”ஆனால் எங்களுக்குன்னு அறிவு இருக்கு தானே?”
”அது என் வீடுன்னா இதுவும் என் வீடு தானே?”
”அங்க இருப்பது என் அம்மா அப்பான்னா இங்க உங்களை நம்பி என்னையே கொடுத்தப்பின் இன்னும் என்ன வேற்றுமை? இங்க இருப்பதும் என்னை தங்கம் போல் பார்த்துக்கும் அம்மாவே தான்னு நான் நம்பி தானே என்னை கொடுத்தாங்க?”
”வீடு என்னிக்கு கோவிலாகும் தெரியுமா?” என்று ஆரம்பித்தாள்
”ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ் க்ருஷ்...தொடங்கிட்டியா லெக்சர்?” என்று கொட்டாவி விட்டான்....
”ஹே... கிண்டலா?” என்று அவன் தோளில் வலிக்காது குத்தினாள்...
”இல்லப்பா சும்மாத்தான்...”
”ஆனால் மனம் கொள்ளும் அளவுக்கு ஐயா சந்தோஷமா இருக்கேன்...”
”ஏனாம்?” நாணத்துடன் கேட்டாள்...
”என்னை வளர்க்க அம்மா பட்ட கஷ்டங்களை நான் சொல்லாமல் நீயே புரிஞ்சு என்னை நல்லபடி பார்த்துக்க எனக்கு தாயன்புடன் கூடிய ஒரு இணை கிடைத்ததுக்கு தான்” என்று இழுத்து அணைத்துக்கொண்டான்....
வளையல் ஓசையுடன் சிணுங்கல் ஓசை வெளியே விளக்கணைக்க வந்த முத்துமணி காதில் விழ இறைவனுக்கு நன்றி கூறி விளக்கணைத்தாள்.... நல்ல மருமகள் வீட்டுக்கு வந்தால் வீடு கண்டிப்பாக கோவிலாகும் என்பதில் என்ன சந்தேகம்???
கதை படிச்சதும் எல்லாரும் ஆச்சர்யமா கேப்பீங்களே என்ன ஒரு ட்விஸ்டும் இல்லை ஒரு த்ரில்லிங்கும் இல்லைன்னு.....
அன்பை மட்டுமே முதலீடா போட்டு தொடங்கும் வாழ்க்கை கண்டிப்பா வெற்றியுடன் நன்மக்களைப்பெற்று நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லப்பிள்ளைகளை உருவாக்கித்தருவாங்க என்பதில் என்ன சந்தேகம்?
அன்பு மட்டுமே அளவில்லாமல் இருக்கும் இடமெல்லாம் சண்டை சச்சரவு ஏது??
“ட்விஸ்ட் எதிர்ப்பார்த்து வந்தவங்களுக்கு வெவ்வெவ்வ்வ்வெவ்வ்வே... ”
Tweet |