" இந்த பிராப்ளம் சால்வ் பண்ணமுடியாதா அப்பா? “ மகன் எழிலரசனின் குரல் கேட்டு கவனம் சிதறியது சிவநேசனுக்கு...
“ என்ன பிராப்ளம் எழில் ? “ அன்புடன் மகன் எழில் தலை கலைத்து கேட்டான் அப்பா சிவநேசன்
“ அதான் மாமாவுக்கும் உங்களுக்கும் நடக்கிறதே அது தான் “
” உங்களுக்குள் பிரச்சனை என்பதால் பாருங்க எங்களால் மாமாவின் குழந்தை சாய்ரோஷனை சந்திக்கமுடியவில்லையே ” குரல் உடைந்து அழத் தொடங்கினான் எழில்.
சட்டென மனம் பதறி அணைத்துக்கொண்டான் சிவநேசன் குழந்தையை...
பெரியவர்களின் பிரச்சனையால் பிள்ளைகள் படும் அவஸ்தையை கண்டு ஒன்றும் செய்ய இயலாமல் எப்படி இந்த பிரச்சனையை சரி செய்வது என்று யோசித்தபடி எழிலுடன் வீடு வந்து சேர்ந்தான் சிவநேசன்.
“ என்னங்க குழந்தைக்கு நாளைக்கு பள்ளிக்கு எடுத்துச்செல்ல பேனா வாங்கினீர்களா? “ கேட்டுக்கொண்டே ராகினி மகனை உற்று நோக்கியபோது எழில் சுரத்து குறைந்து சோர்வுடன் இருந்ததை கண்டு பதறினாள்.
“ என்னாச்சு எழிலுக்கு? “ என்றபடி எழில் முகத்தை தன் கைகளில் ஏந்தினாள் ராகினி..
“ சாய்ரோஷனை போய் பார்க்கவேண்டுமாம் எழிலுக்கு “ ஆயாசமாக உட்கார்ந்தான் சொல்லிக்கொண்டே சிவநேசன்..
“ பழைய பிரச்சனைகளை எல்லாம் மறப்போம்.. தம்பியிடம் நீங்க பேசுங்களேன் நாளை... என் தம்பி தவறு செய்யவில்லை என்றாலும் அவன் தன் மனைவி பேச்சைக்கேட்டுக்கொண்டு நம்மை மோசமாக பேசியது குற்றம் தான் ஒத்துக்கொள்கிறேன் “
” ஆனால் அவனும் தான் என்ன செய்வான் பாவம்... மனைவி பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசினால் அவன் நிலையும் மோசமாகுமே...”
“ நீ எப்பவும் உன் தம்பிக்கே சப்போர்ட் பண்ணு. மனைவியை அடக்க துப்பில்லை அவனுக்கு.. இன்னைக்கு இங்க அவன் இருப்பது யாரால் என்ற நன்றி கொஞ்சமாவது இருக்க வேண்டாமா? வேகமாக பொரிந்து தள்ளினான் சிவநேசன்.
“ பொறுமையா இருங்க ப்ளீஸ்.... அவன் நம் நன்மையை உணரலைன்னாலும் பரவாயில்லை... அவன் நல்லா இருந்தாலே போதும் “ கணவன் அறியாது தன் கண்ணீரை அடக்க சிரமப்பட்டாள் ராகினி.
“ என் குழந்தை போல அவனை நினைத்தேனே... இப்படி பேசிவிட்டானே “ ஆதங்கத்தில் குமுறினான் சிவநேசன்.
“ உங்களுக்கு தெரியுமா? அவன் உங்களை வெறுக்கவில்லை உங்கள் மேல் அதிக மதிப்பு வைத்திருக்கிறான்.. அவன் வெறுப்பது என்னைத்தான்... என்றாவது உண்மை உணர்ந்து திருந்தி திரும்பி நம் வீட்டுக்கு வருவான் பாருங்க. எனக்கு கண்டிப்பாக நம்பிக்கை இருக்கிறது “ என்றாள் ராகினி.
“ நீ இன்னமும் எல்லோரையும் நம்பி ஏமாந்துக்கொண்டே இரு.... எல்லோரையுமே நல்லவங்கன்னு நம்பிக்கிட்டே இரு... இது கலிகாலம் ராகினி... எல்லோருமே சுயநலவாதிகள். தான் மட்டும் நல்லா இருந்தா போதும் தன் குடும்பம் நல்லா இருந்தா போதும் என்று நினைக்கும் சுயநலவாதிகள் “ இயலாமையால் கண்கள் கலங்கியது சிவநேசனுக்கு.
“ நல்லதுக்கு தான் எப்பவும் சோதனைகள் தொடருங்க. ஆனால் இறுதி வெற்றி உண்மைக்கு மட்டுமே... நான் சொல்லாத ஒன்றை சொன்னதாகச்சொல்லி புருஷனை நம்பவைத்து நமக்கு எதிராக எதிர்த்து பேசவைத்து நம்மை பிரித்தது போதாதென்று நம்மை பற்றி இழிவாக சொல்லிக்கொண்டு இருக்கா. தம்பியும் அதை நம்பிக்கொண்டு நம்மை எதிரியாக நினைக்கிறான். நாம் நால்வரும் உட்கார்ந்து பேசினால் தம்பி மனைவி சொன்னதெல்லாம் பொய் என்பது ஊர்ஜிதமாகும் கண்டிப்பா... ஆனால் அதை அவள் விரும்பவில்லை... நம்மை அவனுடன் சேர்க்காமல் பிரிப்பதில் தான் உறுதியாக இருக்கிறாள். நான் மனிதர்களை நம்பலைங்க. ஆனா கடவுளை நம்புகிறேன். உண்மைக்கு என்னிக்கும் சக்தி அதிகம் சோதனைகளும் அதிகம்... சோதனைகளை கடந்து உண்மை உணர்ந்து தம்பி திருந்தி வருவான் நம்மிடம் அதுவரை அமைதியாக பொறுத்துக்கொள்வோம் எல்லாம் “ சொல்லி முடித்தாள் ராகினி....
“ இல்ல ராகினி என்னால் அப்படி இருக்கமுடியலை, என்னால் அவனை மறக்கவும் முடியவில்லை. நான் அவனை எல்லாம் மறந்து மன்னிக்க தயார். வா நாம இப்பவே போவோம் உன் தம்பி வீட்டுக்கு “ என்று கிளம்பத் தயாரானான் சிவநேசன்.
காரில் உட்கார்ந்திருந்த எழிலுக்கு ஒரே கொண்டாட்டம் இத்தனை நாட்கள் சாய்ரோஷனை பார்க்கவே இல்லையே. எப்படி இருப்பான் என்னிடம் நல்லா பேசுவானா என்று யோசித்தபடியே உறங்கிவிட்டான்.
சிவநேசன் ராகினியின் தம்பி ராகவன் வீட்டுக்கு காரை வேகமாக விரட்டினான்...
மூவரும் வீட்டை நெருங்கி தூங்கிக்கொண்டிருந்த எழிலை தோளில் தூக்கிக்கொண்டு ராகவன் வீடு நெருங்கி சிவநேசன் ஆவலாக காலிங் பெல் அழுத்த முனைந்தபோது உள்ளிருந்து ராகவனின் மனைவி உச்சக்குரலில் ராகவனிடம் கத்திக்கொண்டிருந்தாள்...
“ உங்களுக்கு இப்ப கார் லைசன்ஸ் கிடைச்சிட்டுது எவ்வளவோ சிரமப்பட்டு... நல்ல வேலையும் கிடைச்சு அதிக சம்பளமும் கிடைச்சுட்டுது... இனி உங்க அக்காவும் மாமாவும் நாக்கை தொங்கப்போட்டுக்கிட்டு ஓடிவந்து ஒட்டிக்கொள்ளப்போறாங்க உங்கக்கிட்ட பணம் பிடுங்க பாருங்க “ என்றாள்.
வெளியே நின்றிருந்த ராகினியும் சிவநேசனும் அதிர்ச்சியில் உறைந்து ஒன்றும் பேசாமல் வந்த வழி திரும்பி இறங்கி காருக்குள் உட்கார்ந்து காரை ஸ்டார்ட் செய்தான் சிவநேசன்...
உறக்கம் கலைந்து எழில் “ அப்பா மாமா வீடு வந்துவிட்டதா?? “ என்று ஆவலுடன் கேட்டான்.
“ இல்ல தங்கமே உங்க மாமாவுக்கு போன் செய்தேன் இப்ப தான். மாமாவுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்து அமெரிக்காவுக்கு போயாச்சாம் “ சுரத்தில்லாமல் குழந்தையிடம் பொய் சொன்ன குற்ற உணர்வோடு தலை குனிந்திருந்தனர் ராகினியும் சிவநேசனும்..