"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Thursday, September 26, 2013

தெய்வம் நின்று காக்கிறது....



” உங்க மகனுக்கு கண்டம் இருக்குங்க பார்த்து வண்டி எதுவும் ஓட்டாமல் இருப்பது நல்லது “ தங்கம் சொல்லும்போது நான் அதிர்வுடன் பார்க்கிறேன்.

” என்ன தங்கம் சொல்றீங்க. அஞ்சான் எப்போதும் வண்டி ஓட்டுவதில் பைத்தியம்… அதனால் தான் அவனை ஹெல்மெட் போட்டுக்கோடா, கார் ஓட்டும்போது சீட் பெல்ட் போட்டுக்கோடான்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்.”

” இல்லம்மா நீங்க புரிஞ்சுக்க மாட்டேன்றீங்க நான் சொல்ல வருவதை. பையன் வண்டி எடுத்தான்னா கண்டிப்பா விபத்து பயங்கரமா நடக்கும் அவ்ளவு தான் நான் சொல்லிட்டேன் கிளம்பறேன். ” சொல்லிவிட்டு தங்கம் இடத்தை காலி செய்துவிட்டார் என் மனதில் சுமையை ஏற்றிவிட்டு…

அஞ்சானுக்கு இன்னைக்கு போன் செய்துடணும். எப்ப பார்த்தாலும் நிம்மதி இல்லாம இருக்கிறேன். அவன் வண்டி எடுத்தான்னா அசுர வேகத்துல வண்டி ஓட்டுகிறான். இளம் வயது. பயம் இருப்பதில்லை.. சொன்னா கேட்டுப்பான்.

யோசனையில் இருக்கும்போது போன் சத்தம் என்னை இயல்புக்கு அழைக்கிறது. அட அஞ்சான்..

“ அஞ்சான் என்னம்மா எப்படி இருக்கே ராஜா? “

” நல்லா இருக்கேன் மா நீங்க எப்படி இருக்கீங்க? அப்பா, தம்பி, எப்படி இருக்காங்க?”

” எல்லாரும் சௌக்கியம்பா… என்ன இந்த நேரத்துல போன்?”

” அம்மா நான் புதிதா வாங்கின வண்டியை விற்கிறேன்மா.. தப்பா நினைக்காதீங்க,. ஆசையா வாங்கிக்கொடுத்த பைக் அதுவும் இத்தனை செலவு செய்து வாங்கிக்கொடுத்தீங்க புதுசு வாங்கி ஒரு மாசம் கூட ஆகல. ஆனா நாலு முறை ஆக்சிடெண்ட் ஆகிவிட்டதும்மா அதான் விற்கலாம்னு. ”

”ஐயோ உனக்கு ஒன்னும் ஆகலையே? அதிர்ச்சியுடன் நான்.”
”இல்லைம்மா.. நான் சௌக்கியமா இருக்கேன்.”

” சரி ராஜா. விற்றுவிடு.. அப்பாட்ட நான் சொல்லி சமாளித்துக்கொள்கிறேன் ”சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டேன். தெய்வம் இத்தனை எளிதாய் என் மகனை காப்பாற்றும்னு நினைக்கவில்லை.

வண்டி இல்லன்னா எங்கும் சுற்றமாட்டான். ஆபிசு விட்டால் வீடு. நிம்மதியாக இருக்கலாம்.. ஆசுவாசம் எனக்குள்..

வீட்டில் இவர் கத்த ஆரம்பிச்சுட்டார்.
”என்ன நினைச்சுட்டு இருக்கான். இவ்ளோ செலவு பண்ணி புது பைக் வாங்கி இப்படி அரக்கப்பரக்க விற்கனுமா என்ன?”

”எனக்கு வண்டியை விட குழந்தையின் நலன் முக்கியமா படுதுங்க.”
” எல்லாம் நீ கொடுக்கிற செல்லம் தான் ” திட்டிவிட்டு நகர்ந்தார்.

”அஞ்சான் ஊருக்கு வர டிக்கெட் எல்லாம் புக் பண்ணிட்டியாம்மா? ”
”பண்ணிட்டேன்மா.. இண்டர்வ்யூல செலக்ட் ஆகிவிட்டதால்  நிம்மதி.மெடிக்கலும் முடிந்துவிட்டது. எப்ப ஜர்னின்னு சொன்னால் அன்னிக்கு கிளம்பிருவேன்மா.. ”

” அப்பாவின் என் ஆசிகள்டா ராஜா. ” சொல்லிவிட்டு போன் வைத்தேன்.
அஞ்சான் வரும் நாளை எதிர்ப்பார்த்து ஆசையுடன் காத்திருந்தோம் எல்லோருமே இங்கு.

பகவானே என் பிள்ளைகளை என்றும் நான் பிரியாமல் இருக்கும்படி எனக்கு கருணை செய்துட்டேப்பா…

தினமும் ஆபிசுக்கு கிளம்புமுன் எல்லோருக்காகவும் வேண்டிக்கிட்டு கிளம்புவேன். ஆபிசு விட்டு வரும்போதும் இறைவனுக்கு நன்றி சொல்ல மறப்பதில்லை…

இன்னைக்கு என்னவோ மனசு ஒரு மாதிரியா இருக்கே… ஏதோ ஒரு பயம் மனதில் அடைக்கிறதே.. அஞ்சான் வண்டி எடுத்திருப்பானோ? சே இருக்காது கண்டிப்பா இருக்காது. அவனிடம் தான் வண்டி இல்லையே.. 

இதை நினைச்சுக்கிட்டே நான் ஆபிசை விட்டு மாலை கிளம்பி ரோட் கிராஸ் செய்கிறேன். அப்ப சட்டுனு ஒரு காட்சி  கண்முன். ஒரு வண்டி வேகமாக வந்து அஞ்சான் வண்டியை வேகமாக இடிக்க அஞ்சான் வண்டியில் இருந்து மேல எழும்பி பறந்தான் வலியுடனான அவன் முகம் தெரிந்ததும் மிரண்டேன். சட்டென்று மென்மையான உடையில் பாபா வந்து அஞ்சானை தாங்குவது போல் தெரிந்தது. தலைச்சுற்ற ஆரம்பித்துவிட்டது.

” ஐயோ இப்ப தானே உடம்பு கொஞ்சம் சரியானது போல் இருந்தது. மறுபடி தலைச்சுற்றல் மயக்கம். கடவுளே நெஞ்சுவலி வந்துவிடக்கூடாது. அஞ்சானுக்கு ஒன்னும் ஆகக்கூடாது. ” நினைத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தேன்.

வீட்டின் வேலைகள் சின்னவனின் எக்சாம் பாடங்கள் என்று மும்முரமாகிவிட்டேன். ராத்திரி நெஞ்சு அடைப்பது போல் இருந்தது படுக்கும் முன்னாடி.  தண்ணீர் குடித்துவிட்டு படுத்தேன்.
அகால நேரத்தில் இடைவிடாது போன் சத்தம்..

அகால நேரத்தில் போன் வந்தால் உடம்பு தூக்கிப்போடுகிறது. ஊரில் யாருக்கு என்ன ஆச்சோ என்ற பதட்டம் அதிகமாகிறது. வேகமாக எழுந்து போன் எடுத்தால் தங்கை ஷோபி அழுகைக்குரலுடன். ” மஞ்சு மஞ்சு வேகமா ஸ்கைப்ல வா ” என்றாள்.

“என்னடி இந்த நேரத்துல என்னாச்சு ? “ என்றேன் பயத்துடன்.
“முதல்ல வா நீ ” என்றாள்…

நான் பயத்தில் கதறிய சத்தம் கேட்டு வீட்டில் எல்லோருமே எழுந்தாச்சு.. இரண்டு மணி… வேகமாக ஸ்கைப்பில் வந்தால் அழுகை முகத்துடன் ஷோபி. என்னாச்சு ஷோபி என்னாச்சு சொல்லு எனக்கு பதட்டம் அதிகமானது. மஞ்சு மஞ்சு டென்ஷனாகாதே.. பெரியம்மா நைட் கல்யாண ரிசப்ஷனுக்கு போகணும்னு சொல்லி அஞ்சானிடம் சொல்லி இருக்காங்க.

 உதவி யாரேனும் கேட்டால் மறுக்காமல் உடனே உதவிட துடிக்கும் பிள்ளை அஞ்சான். இதோ என்று உடனே கிளம்பிட்டான். நைட் ரெண்டு பெரியம்மாவையும் பின் சீட்டில் உட்காரவெச்சுட்டு கார் ஓட்டிக்கிட்டு பாடி ப்ரிட்ஜ் கிட்ட வரும்போது பின்னாடி வந்த வண்டி ஒன்று ஓவர் டேக் பண்ணும் அவசரத்தில் இவன் வண்டியை முட்டி மோதிருச்சு என்று சொல்லி முடிக்குமுன் எனக்கு மயக்கம் வந்தது.
“ஐயோ அஞ்சான் அஞ்சான் அஞ்சான் ” விழுந்தேன்.

இவர் பயந்து ” ஷோபி அஞ்சான் எங்கே அவனுக்கு ஒன்னும் ஆகலையே ”என்று எல்லோரும் கதறினார்கள்.

“இதோ இதோ அஞ்சானுக்கு ஒன்னும் ஆகல மஞ்சு கண் முழி அஞ்சானுக்கு ஒன்னும் ஆகல நல்லாருக்கான் இதோ பாரு இதோ பாரு அஞ்சான் அம்மாவை பாருடா ” என்று சொல்லி என் பிள்ளையை காட்டினாள்.

 என் பிள்ளையின் அழுத முகம்.. நான் எப்போதோ சின்ன வயதில் அடிக்கும்போது என் பிள்ளை அழுதமுகத்தை பார்த்திருக்கிறேன், அதோடு இத்தனை வருடம் கழித்து என் பிள்ளையை இப்படி பார்த்ததும் மனம் சமாதானம் ஆகலை.

 ” என்னாச்சு அஞ்சான் என்னாச்சுடா ”என்று கத்தினேன்.

”எனக்கு ஒன்னும் இல்லம்மா… வண்டி மோதினதுல கார் பல்டி அடித்து உருள ஆரம்பித்து தரையை தலைகீழ் தேய்த்துக்கொண்டே போய் சுவற்றில் இடித்து நின்றது.

ஜன்னல் கண்ணாடி உடைந்து “ சீட் பெல்ட் போடாததால் “ வெளியே போய் விழுந்துட்டேன்மா “ என்றான்.

” ஐயோ பெரியம்மாக்கு ரெண்டு பெரியம்மாவுக்கும் என்னடா ஆச்சு ” என்றேன் பதட்டத்துடன்…

” ஒரு பெரியம்மாவுக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இன்னொரு பெரியம்மா கால் சீட்டுக்கு இடையில் மாட்டிக்கொண்டு எடுக்க வராததால் வண்டியை திருப்பி மெல்ல அவரை மீட்டோம் “ என்றான்.

”போலீஸ் விரைந்து வந்தது ஸ்பாட்டுக்கு. முகம் தெரியாதவர்கள் எல்லாம் உதவினார்கள் அம்மா ” என்றான்.

” ஐயோ கடவுளே இருவருக்கும் ஒன்றும் ஆகக்கூடாது..”
இரண்டு பெரியம்மாவும் போலிசிடம் ” இது எங்கப்பிள்ளை தான். இவன் பெயரில் தப்பில்லை.. பின்னாடி இருந்து வந்த வண்டி முட்டி மோதி வேகமாக போய்விட்டது. எங்களால் வண்டியை பார்க்க முடியவில்லை ” என்று சொல்ல அஞ்சான் மேல் எந்த வித கேசும் இல்லாமல் சுமுகமாக முடிந்தது.

இந்த விபத்தில் அஞ்சான் மட்டும் சின்ன சின்ன காயங்களோடு எப்படி தப்பினான் என்று போலிசுக்கள் ஆச்சர்யமாக பார்க்கிறார்கள். என் தங்கையும் பெரியம்மா மகளும் சொல்றாங்க பாபா தான் அஞ்சான் உயிரை பத்திரமா காப்பாற்றி இருக்கிறார் என்று.
”சீட் பெல்ட் எப்போதும் போடுடா போடுடா ” என்றால் போடவே மாட்டான்.

அன்றும் சீட் பெல்ட் போடாததால் உயிர் தப்பியிருக்கான்.
நான் கீர்த்தி வினாயகரிடம் போய் உட்கார்ந்து அழுகிறேன். ” என் பிள்ளைக்கு ஏதாவது ஒன்று ஆனால் சத்தியமாக நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன். தெரியும் உனக்கு. என் மேல் எத்தனை கருணை பகவானே உனக்கு.”

முகம் தெரியாதவர் எத்தனையோ பேர் அருகே இருந்து உதவி இருக்கிறார்கள். போலிஸ் ஸ்டேஷனிலும் ஆஸ்பிட்டலிலும் அஞ்சானைக்காப்பாற்றும் முயற்சியில் தான் இரண்டு பெரியம்மாக்களும் இருந்திருக்கிறார்கள். இருவரின் ஓயாத வேண்டுதல். அஞ்சான் நல்லபடியா குவைத் போய் சேரவேண்டும். அவன் அப்பா அம்மாவிடம் பத்திரமாக சென்று சேரவேண்டும்.

இந்த விஷயம் கேள்விப்பட்ட நண்பர்கள், உறவினர்கள் அத்தனைப்பேரும் அஞ்சானுக்காகவும். இரண்டு பெரியம்மாக்களுக்காகவும் பிரார்த்தித்தனர்.
அத்தனைப்பேரின் ஆசிகள், பிரார்த்தனைகள் பத்திரமாய் சரியாக சொன்ன தேதியில் வந்து இறங்கினான் அஞ்சான்.

கடவுளின் கருணையை நினைத்து தினமும் இடைவிடாது நன்றிகள் சொல்லிக்கொண்டு.. இந்த விபத்தில் ஒரு பெரியம்மாவுக்கு மட்டும் இன்னும் ஆபரேஷன் நடந்து படுக்கையில்.. அவரும் எழுந்து வேகமாக நடமாடவேண்டும். பூரண நலம் பெறவேண்டும் என்ற பிரார்த்தனை தொடர்ந்துக்கொண்டே….

எப்போதும் சிறு வயதில் இருந்து அஞ்சானிடம் சொல்லிக்கொண்டே இருப்பேன். “ ஸ்வாமி கிட்ட கண்மூடி உட்காருடா கொஞ்சம் நேரமாவது. “எனக்காக உட்காருவான். நான் சொல்கிறேனே என்று உட்காருவான். ஆனால் இந்த நிகழ்வுக்கு பின்னர் தினமும் ஸ்வாமி கிட்டே உட்காருகிறான் ஒரு மணி நேரம். பிரார்த்திக்கிறான்.

இந்த விபத்து நடந்தப்பின் நண்பர்களும் உறவினர்களும் சொன்ன வார்த்தைகள் ஒரே போல்…

” அஞ்சான் நல்லப்பையன். உதவி என்று கேட்டால் எப்போதும் இன்முகத்துடன் செய்பவன். அவனுக்கு என்றும் நல்லதே நடக்கும்.  ”

”அம்மா அப்பா நீங்கள் இருவருமே யாருக்கும் ஒரு கெடுதலும் செய்ததில்லை. மனதாலும் நினைத்ததில்லை. நாங்கள் இருவரும் செய்த நல்லவையே என் பிள்ளையின் உயிரை காப்பாற்றியதாக சொல்கிறார்கள் எல்லோரும்…”

இது நடந்தது மார்ச் மாதம்.. இறைவன் அருளால்.. எல்லோரின் ஆசீர்வாதத்தால்.. அஞ்சான் என்னும் விக்னேஷ்ராம் இங்கே நல்ல வேலையில் இருக்கிறான்.“ இந்த வேலை கிடைத்ததும் என் அன்புத்தோழியின் உதவியால் நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன் என் தோழியை “ வேலை வாங்கித்தந்த என் தோழி சொல்கிறாள் இப்போது

“ மஞ்சு சீக்கிரம் பையனுக்கு பொண்ணு பாரு.. கல்யாணச்சாப்பாடு எப்பப்போடப்போறே? “

எல்லாமே பகவான் செய்துக்கொண்டிருக்கிறார்… முயற்சி மட்டுமே நம்முடையது.  அந்தந்த நேரம் வரும்போது தானாகவே நல்லது நடக்கும் ஜெம்னி என்று சொன்னேன் ஆசுவாசம் ஆனது எனக்கு.


நல்லதே நினைத்து… நல்லதே பேசி… நல்லதே பகிர்கிறோம்.. எந்தவித பிரதிபலனும் எதிர்ப்பார்க்காமல்.. இறைவன் நம்முள் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன்..

எனக்கு கெடுதல் செய்ய நினைப்போருக்கும் சரி, எனக்கு கெடுதல் செய்வோருக்கும் சரி, என்னைத்தூற்றுவோருக்கும் சரி நான் பதிலுக்கு எந்த கெடுதலும் செய்ததில்லை. இனியும் செய்யப்போவதில்லை..என்னைப்பொறுத்தவரை எல்லோரும் நலமுடன் இருக்கவேண்டும். நான் பட்ட இந்த அவஸ்தைகள் யாருக்கும் வராதிருக்கவே வேண்டுகிறேன்.

Tuesday, September 24, 2013

என் நண்பன்....

” மூச்சு திணறுதுப்பா ” என்று சொல்லும்போதே இரும ஆரம்பித்தேன்.

சொல்பேச்சை கேட்கவே மாட்டான் என்னுடன் வேலை செய்யும் எகிப்தியன். என்னை விட சர்வீசிலும் வயதிலும் மூத்தவன்.

நல்லவன்… மனைவி குழந்தைகளோடு எப்போதும் சந்தோஷமாக இருந்தாலும் இந்த பாழாப்போன சிகரெட்டால் எனக்கும் இவனுக்கும் அடிக்கடி வாக்குவாதம் வரும்..

சில சமயம் வாக்குவாதம் முற்றி இனி உன்னோடு பேசமாட்டேன் என்று இருவருமே முகம் திருப்பிக்கொள்வோம்.

ஆனால் குழந்தைப்போல இவனே தன் வயதை மறந்து என்னிடம் சொல்ல வருவான். சந்தோஷம் , சோகம், கோபம் எல்லாமே என்னிடம் பகிர்ந்துக்கொள்ளும் அருமையான நண்பன்..

என்ன ஒரு பிரச்சனைன்னா இவனுக்கு ஆங்கிலம் அவஸ்தை சுட்டுப்போட்டாலும் வராது. என்னிடம் எதையாவது சொல்லும்போது இவன் மொழியில் பேசிக்கொண்டே தையத்தக்கா என்று பாவனையில் எப்படியாவது தான் சொல்ல நினைப்பதை சொல்லி முடித்துவிடுவான்.
நானும் இவன் பேசுவதை எல்லாம் பொறுமையாக ரசித்து கேட்பதும் உண்டு.

இவனிடம் எனக்கு பிடிக்காத விஷயம். எரிச்சல் தரும் விஷயம், இவனை கொல்லனும்னு தோணும் விஷயம் இவன் இடைவிடாமல் பிடிக்கும் சிகரெட் மட்டுமே.. இதைத்தவிர இவனிடம் எந்தவித கெட்ட குணங்களும் கிடையாது.

பெண்களிடம் வந்து வழிய மாட்டான் பிறரைப்போல. நேர்மையான வேலைகளில் மட்டுமே தன்னை ஈடுப்படுத்திக்கொள்வான். எந்த நேரத்திலும் என்ன உதவி யார் கேட்டாலும் முன்பு நிற்பான் செய்ய…
இப்படியே சில வருடங்கள் உருண்டுக்கொண்டு தான் இருந்தது.சண்டையும் சச்சரவும் அன்பும் பாசமுமாக..

தினமும் சரியா நான் டிபன் பாக்ஸ் பசியோடு திறக்கும்போது இவன் சிகரெட் புகை வாசம் வந்து எனக்கு ஹலோ சொல்லும் என்னையும் எடுத்துக்கோ என்று.. கோபமாக எடுக்கும் கவளத்தை பாக்ஸ்லயே போட்டு ஆத்திரமாக மூடுவேன் மூடியை.. அறிவுக்கெட்டவன்.. எவண்டா கண்டுப்பிடிச்சான் இந்த சிகரெட்டை… என்று எரியும் எனக்கு.

திடிர்னு ஒரு நாள் இவன் சத்தமும் காணோம். சிகரெட் புகையும் காணோம். ஹப்பா நிம்மதி இன்றைக்கு ஒரு நாள் சாப்பிடலாம்னு டிபன் பாக்ஸ் திறந்தால் போன். இவன் சீரியசாக ஹாஸ்பிட்டலில் கிடக்கிறான் மாசிவ் ஹார்ட் அட்டாக்..

ஐயோ அடிச்சு பிடிச்சு எல்லோருமாக கிளம்பி போக நினைத்தோம். ஆனால் ஆபிசில் அனுமதி இல்லை எங்களுக்கு போக..
பொறுத்திருந்து மாலை வீட்டுக்கு சென்று என் குடும்பத்தினருடன் கிளம்பி மருத்துவமனைக்கு போனோம்.

பிரக்ஞையின்றி படுக்கையில் கிடந்தான். பார்க்கவே மனம் பதறியது. எவ்ளோ திட்டினியோ என்னை.. பாரு என்ன நிலைமையில் கிடக்கிறேன் என்று என்னை  கேட்பது போல் இருந்தது..

ஒருவழியாக எல்லோரின் பிரார்த்தனையாலும் டாக்டர்களின் உதவியாலும் உயிர்ப்பிழைத்து வந்து மறுபடி சேர்ந்தான் வேலையில்..
நான் சொல்லிவிட்டேன். ”ஹப்பா இனிமே என் நண்பன் புகைக்கமாட்டான் ”என்று. சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவன் பேக்கெட்டில் இருந்து சிகரெட் எடுத்து வாயில் வைத்துக்கொண்டான்..” போடா நீ உருப்படவே மாட்டே ”என்று திட்டிவிட்டு வந்து என் சீட்டில் உட்கார்ந்துவிட்டேன்.
என் சீட்டருகே வந்து என்னை கேட்டான். எனக்கு சிகரெட் பழக்கம் இருப்பதால் உனக்கு என்ன பிரச்சனை?

”எனக்கு பிரச்சனை இந்த நாற்றம்.. உன் குடும்பத்தினருக்கு பிரச்சனை உன் ஆரோக்கியம். இதை ஏண்டா புரிஞ்சுக்கவே மாட்டேன்கிறே ”என்று தலையில் அடித்துக்கொண்டேன்.

மெல்ல நகர்ந்து தன் இருக்கையில் போய் அமர்ந்தான்.
இப்படியே நாட்கள் கடந்தது. சண்டை மட்டும் ஓயவே இல்லை எனக்கும் அவனுக்கும்.

சில சமயம் சமாதானம். சில சமயம் இருவருமே முகம் சுணங்கி பேசுவதில்லை. எல்லாம் இந்த சிகரெட் அவஸ்தையால் தான்..
ஹெட் ஆபிசு போய் வந்த காதர் என்னிடம் வந்து காதில் கிசுகிசுத்தான். ”உனக்கு விஷயம் தெரியுமா? இனிமே உனக்கு நிம்மதி.. சிகரெட் நாற்றம் நாளை முதல் இருக்காது..”

”ஏண்டா ”என்றேன். ”அவன் பழக்கத்தை விட்டுட்டானா என்ன ”என்று ஆச்சர்யத்துடன் கேட்டேன். மழை தான் வரும் என்று தோணித்து எனக்கு.
”இல்ல ”என்று சொல்லி நிறுத்தினான் காதர்..

”என்னன்னு தான் சொல்லேன் ”என்று உலுக்கினேன் காதரை..

”டர்மினேட் பண்ணிட்டாங்கப்பா யூஸ்ரியை ”என்றான் காதர்.

அதிர்ச்சியில் எழுந்துவிட்டேன்.

”ஐயோ … இவன் ஒருத்தன் சம்பளத்தில் தான் குடும்பம் முழுவதும்..
இனி என்ன செய்வான்.. ”

இவன் முகம் பார்த்து பேச எனக்கு சங்கடமாக இருந்தது.

கடவுளே இவனை அப்புறப்படுத்தச்சொல்லி நான் வேண்டவில்லையே. இவன் சிகரெட் புகைப்பது தானே நிற்கவேண்டும் என்று நினைத்தேன்.
மனம் ஒரே ஆராட்டம் ஆனது.. என்ன சொல்வது எப்படி சமாதானம் சொல்வது ஒன்றும் புரியாமல் வியர்க்க ஆரம்பித்தது. மனம் பதட்டத்தில்..
யூஸ்ரி சிரித்துக்கொண்டே என் கேபினுக்குள் நுழைந்தான்…

”கையைக்கொடு.. கடைசில நீ வணங்கும் கடவுள் உன்னை காப்பாத்திட்டாரு” என்றான்.

எனக்கு கஷ்டமாக இருந்தது அவன் செயலைப்பார்க்க..

”யூஸ்ரி சாரிப்பா.. சத்தியமா  உனக்கு இப்படி ஆனதில் எனக்கு சந்தோஷம் இல்லை ப்ளீஸ் நம்பு ”என்றேன்.

”ஹே விடுப்பா.. ”

”வேற வேலை கிடைக்குமா ”என்றேன்.

”பைத்தியக்காரி இனி வேலை செய்ய என் உடம்பும் ஒத்துழைக்காது.. ஊர் போய் சேரவேண்டியது தான்.”

”நீ சந்தோஷமா இரு.”

”இத்தனை நாள் உன்னை நான் ரொம்பவே கஷ்டப்படுத்திவிட்டேன். ”
”என் நல்லதுக்காக தான் நீ சொன்னே ஒவ்வொரு முறையும் சிகரெட் விடச்சொல்லி..”

”நான் உன் பேச்சை கேட்டிருந்தால் அட்லீஸ்ட் என் ஆரோக்கியம் நலமாக இருந்திருக்கும்” என்றான், முகமே பார்க்க பரிதாபமாக இருந்தது.
உதடு கடித்து அழுகையை அடக்கமுயன்றான். முடியாமல் கண்ணீர் உருண்டது அவன் கன்னத்தில்..

”ஆம்பிளை அழக்கூடாதுல்ல? அசிங்கம் ”என்று சொல்லிக்கொண்டு சமாளித்தான் யூஸ்ரி..

”ஆல் த வெரி பெஸ்ட் யூஸ்ரி.” என் குரல் எனக்கே கேட்கவில்லை..
மனம் உடல் எல்லாம் தளர்ந்தது போல் ஒரு நிலை எனக்கு.

”கடவுளே இப்படி ஒரு நிலையை காண வைத்துவிடாதே என்னை மீண்டும் “ என்று நினைத்துக்கொண்டே கைக்கொடுத்தேன் யூஸ்ரிக்கு.

”நீ எங்கிருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும்…. எப்போதும் உனக்காக உன் தங்கை எங்கோ ஒரு இடத்தில் இருந்து உனக்காகவும் உன் குடும்பத்துக்காகவும் பிரார்த்திக்கொண்டே இருக்கிறாள் என்ற நம்பிக்கை மட்டும் மனதில் வைத்துக்கொள் தினமும். 

உன்னை தினமும் என் பிரார்த்தனையில் நினைவுக்கொள்வேன்.” அழுகையை என்னாலும் அடக்கமுடியவில்லை…


Thursday, September 5, 2013

ஆசிரியர் தின அன்பு வாழ்த்துகள்....



அட எல்லாரும் இன்னைக்கு ஆசிரியர் தினத்தை நினைவுக்கொண்டு ஆசிரியர்களைப்பற்றி பகிர்வு பகிர்ந்து தன் அனுபவங்களை சொல்லும்போது எனக்கும் நான் பள்ளியில் படிக்கும்போது பண்ண சேட்டைகள் என்னை பொறுமையாக பொறுத்துக்கொண்ட ஆசிரியர்களைப்பற்றி சொல்லியே ஆகணும்னு தோணுகிறது.. சொல்லட்டுமா?

எல் கே ஜி ல மேரி மிஸ்...
 மாலை மணி 3 ஆனால் ஒரு மசால் வடையும் ஒரு கப் டீயும் குடிப்பாங்க உதட்டில் இட்டிருக்கும் லிப்ஸ்டிக் அழியாம இருக்கே இவங்க வடை சாப்பிட்டு டீ குடிச்சப்பின்னரும் அப்டின்னு அப்பவே எனக்கு ஒரே சந்தேகம். ஆனா கேட்கலை அவங்க கிட்ட...


யூ.கே.ஜி விஜி மிஸ்....
 ரொம்ப ரொம்ப ஸ்வீட்.. நான் வளர்ந்தப்புறமும் பஸ்ல அம்மாவை அடையாளம் கண்டுப்பிடிச்சு என்ன கொடுமை பாருங்க எனக்கு அடையாளம் தெரியல. அவங்களே வந்து பேசினாங்க...


ஒன்னாம் கிளாஸ் லூசி மிஸ்...
 அடங்கி ஒரு இடத்துல உட்காரவே மாட்டியா நீ??  இரு உங்க அம்மாக்கிட்ட வந்து கம்ப்ளெயிண்ட் பண்றேன்... வீட்டுக்கு வந்தாங்க கம்ப்ளெயிண்ட் பண்ண... அம்மாட்ட ஃப்ரெண்ட் ஆயிட்டாங்க.. :)

இரண்டாம் கிளாஸ் டாட் மிஸ்...
 ரொம்ப ரொம்ப ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. எந்த அளவு ஸ்ட்ரிக்ட் என்றால் காரணம் கேட்காமலே அடிக்க விரட்டுவாங்க. அடி வாங்காம நைசா க்ளாஸ் முழுக்க ஓடி அவங்களையும் மூச்சிறைக்க வைப்பதுண்டு...

மூன்றாம் கிளாஸ் அருணா மிஸ்....
 என்ன ஒரு அழகு.. என்ன ஒரு கலர்.. ஆனா விட்டேத்தித்தனம் ஜாஸ்தி.. பிள்ளைகள் படிக்கிறாங்களா இல்லையான்னு கூட கவனிப்பதில்லை.. எப்ப பார்த்தாலும் அவங்க பையன் படிக்கிற க்ளாஸுக்கு ஓடி போய் கவனிச்சுக்கிட்டு இருப்பாங்க :)

நான்காம் கிளாஸ் வசுமதி மிஸ்...
 என் குறும்புத்தனத்தையும் மீறி என்னை நேசித்த மிஸ்...நடனம்னா வெறும் பரதநாட்டியத்துலயே முட்டிக்கிட்டு இருக்காதேன்னு சொல்லி புரியவெச்ச மிஸ்....

ஐந்தாம் கிளாஸ் ஜெயந்தி மிஸ்.. ( எங்க எச் எம் பொண்ணு)
கோ எஜுகேஷன் என்பது மட்டுமில்லாம ஒரு பெஞ்ச்ல பொண்ணு பையன் அப்டி உட்காரவைச்சாங்க. என் பக்கத்துல உட்கார பசங்க பயந்தாங்க. நம்புங்க அப்ப ரொம்ப ரௌடி… யார் கிட்டயும் வம்புக்கு போகமாட்டேன். ஆனா என் பேச்சுக்கு வந்தா நல்லா அடிப்பேன்.. பாவம் மோஹன் தாஸ் என் பக்கம் உட்கார்ந்த பையன்.. எச் எம் பையன் என் பேக் தூக்கி போட்டதுக்கு மோஹன் தாஸ்னு நினைச்சு செம்ம அடி. அத்தனை அடியும் வாங்கிட்டு கடைசில சொல்றான் நான் இல்லப்பா விஜய் தான் தூக்கிப்போட்டான்னு..

ஆறாம் கிளாஸ் கௌசல்யா மிஸ்….
ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. ஆனா அவங்களே மிரண்டு போற மாதிரி ஒரு நாள் மன்ந்திலி டெஸ்ட் சைன்ஸ்… ஆனா ஜீரம் அதிகமாகவே  ரிக்‌ஷால ஸ்கூல் பாட்டியை துணைக்கு வைத்து வீட்டுக்கு அனுப்பினாங்க. அம்மா டூட்டிக்கு கிளம்பிட்டு இருக்காங்க. நான் வருவதை பார்த்து என்னது ஜுரமா? அதே சைக்கிள் ரிக்‌ஷால ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போய் “ டாக்டர் பெயர் சம்பத்குமார் “ ஊசிப்போட்டு சூடா பாலுடன் மருந்து கொடுத்து அதே ரிக்‌ஷால உட்காரவெச்சு ஸ்கூலுக்கு திருப்பி விட்டுட்டாங்க. மிஸ் மிரண்டு போய் இப்படி ஒரு அம்மாவானாங்களே பார்க்கணும்…

ஏழாம் கிளாஸ் சரோஜா மிஸ்…
ரொம்ப கனிவான மிஸ்.. பிள்ளைகள் எல்லோருமே தன் பிள்ளைகள் போல பார்த்துக்கிட்டாங்க. யாராவது சாப்பிடாம வந்தா உடனே ஒரு பன் வாங்கி தருவாங்க சாப்பிட.. எங்க மாடி வீடு திடிர்னு தீப்பற்றி எரிந்தப்ப என்ன சொல்லி ஸ்கூல்ல லீவ் கேட்கலாம்னு யோசிச்சு இதைச்சொல்லி சரோஜா மிஸ்  கிட்ட நின்னப்ப உடனே  ப்யூனை கூப்பிட்டு பன் வாங்கி வரச்சொல்லி பிடிக்காத பன்னை என்னை தின்ன வெச்சாங்க பாருங்க….

ரங்கமணி மேத்ஸ் மிஸ்… அதே ஏழாம் கிளாஸ் தான்..
எல்லாரும் இனிமே க்ளாஸ்ல ஆங்கிலத்துல தான் பேசனும்னு சர்க்குலர் வந்தப்ப ” இங்கிலிஷ் பீரியட்ல இங்கிலீஷ்ல பேசனும், தமிழ் பீரியட்ல தமிழ்ல பேசனும் அப்டின்னு “
என் போறாத நேரம் என் நாக்கில் சனீஸ்வரர் டிஸ்கோ ஆடிண்டிருந்தார்… சும்மா இருந்தாரா? மிஸ் இங்கிலிஷ் பீரியட்ல இங்கிலீஷ்ல பேசனும், தமிழ் பீரியட்ல தமிழ்ல பேசனும் மேத்ஸ் பீரியட்ல மேத்ஸ்ல பேசனுமா? அப்டின்னு நான் கேட்டப்ப அவங்க மூக்குகண்ணாடி தாண்டி முறைச்சதை இப்பவும் நினைச்சு பார்க்கிறேன்..

அதே மிஸ் பாரதியார் பாட்டுப்போட்டிக்கு ஜட்ஜா மூணு பேர்ல ஒருத்தரா வந்து உட்காரணுமா ? மூணுல ஒருத்தர் இவர் இன்னொருத்தர் லலிதா மிஸ் என் பாட்டு டீச்ச்சர்.. இன்னொருத்தர் வேற.
நான் ரொம்ப  சுவாரஸ்யமா முப்பது கோடி முகமுடையாள் அப்டின்னு பாடும்போது இதோ இந்த பொண்ணு தான் இப்படி கேட்டு என்னை டென்ஷனாக்கினதுன்னு போட்டு உடைக்க.. ஐயோ எனக்கு பரிசு கிடைக்காதோன்னு பயந்தேன். ஆனால் எப்போதும் போல் எனக்கே முதல் பரிசு ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா..

எட்டாம் கிளாஸ் சரோஜா பேர் ஒன்னு ஆனா வேற மிஸ்…
இந்த வருடத்தில் இருந்து தான் ஆங்கிலமீடியமா இருந்தாலும் தமிழ் பீரியட்ல வர மிஸ்ஸை ” வணக்கம் ஆசிரியை “ அப்டி சொல்ல சொன்னாங்க. க்ளாஸ் முடிஞ்சு போகும்போது “ நன்றி ஆசிரியை “ அதனால் தான் என்னால் இயல்பாய் வயதில் மூத்தவர்களை ஐயான்னு கூப்பிடமுடிகிறதுன்னா அப்ப தொடங்கின பழக்கம் தான்… 


ஒன்பதாம் கிளாஸ் தனலக்‌ஷ்மி மிஸ்…
எதையும் கண்டுக்கமாட்டாங்க. ஆனா கோபம் வந்தால் யாரேனும் மிஸ்சிவ்ஸ் பண்ணினா நேரா ப்ரின்ஸ்பல் ரூமுக்கு அனுப்பிருவாங்க.

பத்தாம் கிளாஸ் சியாமளா மிஸ் (தேவதை என்னைப்பொறுத்தவரை)
சியாமளா என்ற பெயர் கேட்டால் எப்போதும் எனக்கு ஒரு ஈர்ப்பு.. இத்தனை அழகான தேவதை முதல் நாள் கிளாசுக்குள் நுழைந்தப்ப ஹப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா என்ன அழகு அப்படின்னு எல்லோரும் ஆச்சர்யப்பட்டோம்.. நீளமான தலைமுடி.. வலது கையில் தான் வாட்ச்.. தங்கக்கைக்கெடிகாரம்… அழகு முகம்.. மஹாலக்‌ஷ்மி களை… ஆங்கிலத்தில் ஃப்ளூயண்டா பேச வைத்த பெருமை இவர்களுக்கு தான் சேரும்..  நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன்..

ஐயோ ஐயோ முடிச்சதுமே கொண்டு போய் அம்மா திருச்சில எஸ் ஆர் சி ல பி என் ஆர் எம் பாலிடெக்னிக் ல தள்ளிட்டாங்க..
புதிய இடம், புதிய மாணவிகள், புதிய அசிரியர்கள்.. ஆமாம் ஆசிரியர்களும் உண்டு..
முக்கியமா ரமேஷ்பாபு மாஸ்டர்.. எனக்கு பயம்னா பயம்… தினமும் வந்து எதுனா கேள்வி கேட்டு எழுந்து நிக்க வைப்பார்.. பிடிக்கவே பிடிக்காது எனக்கு… தினமும் தவறாம வேண்டிப்பேன். பகவானே இன்னைக்கு மாஸ்டர் பாத்ரூம்ல வழுக்கி விழுந்து வரக்கூடாது க்ளாசுக்கு என்று.. ஆனா ஒரு நாள் கூட லீவ் எடுக்காமல் வந்தார் மாஸ்டர்.. 3 வருஷம்.


எல்லா ஆசிரியர்களும் என் வால்தனத்தை பொறுத்துக்கொண்டதற்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள்…. ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்..
Related Posts Plugin for WordPress, Blogger...