"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, May 12, 2010

எப்போது எப்போது?

நட்பு கொள்ள துடித்திடும் மனது
காதலை சொல்ல தயங்கிடும் வயது

உழைப்பைக்கொண்டு முன்னேறும்போது
தன்னடக்கம் கொண்டு பணிவுடன் நிற்கும்போது

வெற்றிகள் வந்து குவிந்திடும்போது
அன்பு புன்னகையை பகிர்ந்திடும்போது

தயங்காது காதல் சொல்லிவிடு அப்போது
அன்போடு அணைத்துக்கொள்வாள் இசைவோடு....

காதலுக்கு வலிமை கூட்டி....

உயிர் உயிராய் உயிருடன் இருக்க
எத்தனை பெருகவேண்டும் காதல்?
அன்பு அன்பாய் அன்புடன் இருக்க
எத்தனை நிரூபிக்கவேண்டும் அன்புக்காதல்?

பெருகினாலும் குறைந்தாலும்
மாறுபாடு காதலுக்கில்லை
காதல் என்றும் ஒன்றே தான்
உயிர்விடத்தோன்றும் காதலும் ஒன்றேதான்

உண்மை உரைக்கும் உறுதிக்காதல்
பிடிவாதம் கொஞ்சம் தளர்த்திவிடும்
வீம்பாய் பொய்க்கோபம் கொள்ளும்
தன்னுடையது தனக்கே என்று வாதிடும்

உயிர்விட்டு காதலை வலுப்படுத்தும்
காதலுக்கு வலிமை சேர்ப்பதில் அழகில்லை
மனதுக்கு வலிமை கூட்டி காதல் செய்வதை 
அன்றி வேறெதுவுமில்லை....

Wednesday, May 5, 2010

மழையே உனக்கு நன்றி....

அனுமதி கேளாது உள்ளத்தில் நுழைந்துவிடு
முடிந்தவரை உண்டு முடியாததை முத்தமிடு
மென்று முடித்த கணங்களை
கம்பீரமாய் நினைத்துவிடு

ஆண்டு அனுபவித்த பொழுதுகளை
சுகமாய் அசைப்போட்டுவிடு
ஒட்டிக்கிடக்கும் தேகத்தை
முத்தத்தால் இன்னும் இறுக்கிவிடு

மழைத்துளிகள் உடல்களைப் போர்த்திக்கொள்ள
காதல் அரங்கேற்றம் நடத்திவிடு
மூச்சுக்காற்று போட்டியிட
முத்தத்துக்கு முதலிடம் கொடுத்துவிடு

உடைகளற்ற உடல்களை
மழைக்குக் கொஞ்சம் விட்டுக்கொடு
மழைக்கவிதை எழுதிவிட
முத்தங்களை சாரலாய் தெளித்துவிடு

காதல் பெருகி காமம் உருகி
தேகம் பதறி முத்தங்கள் சிதறவிடு
ஜில்லென்ற மழையின் சாரலில்
தேகச்சூட்டின் ஏக்கங்கள் கரைத்துவிடு

உடலை வான்மழையில் நனைத்துவிடு
உள்ளத்தை எனக்கு மட்டும் தந்துவிடு
மெல்லிய அதரங்களின் மினுமினுப்பை
முரட்டு இதழ்களில் சத்தமில்லா ஒப்பந்தமிடு

உள்ளத்தில் எழும் தீயை அணைத்துவிட
மழையை கொஞ்சம் தூதுவிடு
வெட்கமில்லாது பார்க்கும் மேகங்களை
காதலின் சாட்சிக்கு அழைப்புகொடு

விலகாத காதல் விலகிய உடைகள்
சிதறாத காமம் சிதறிய மழைத்துளிகள்
சங்கமம் வெகு நன்றாய் நடந்துவிட
நன்றிகள் அதிகம் மழைக்கு சொல்லிவிடு

அடுத்தப்பிறவி....

போகும் வழியெல்லாம்
தடுக்கி விழும்போது
நெருப்பின் நாக்குகள்
அணைக்க தாவுகிறது

தப்பிப் பிழைத்தபோதோ
கூரிய அம்பாய்
குறி தவறாது வார்த்தைகள்
மனதைத் துளைக்கிறது

பொத்தலான இதயத்துடன்
கண்ணீருடன்
அபயம் கூறி
கை நீட்டுகிறது

இறைவா என்று...
விடாது துரத்திய தீ நாக்கு
கொழுந்துவிட்டெரிந்து
நீட்டிய கைகளை அணைத்து

உடம்போடு மொத்தமாய்
எரித்துச் சொன்னது
பிழைக்காது நீ
செத்துப்போ
இப்பிறவியில்
பட்டது போதும்

இனி நீ துன்பப்பட
ஒன்றுமில்லை இப்புவியில்
ஆதலால் உனக்கு
ஜென்மமும் இல்லை
அடுத்த பிறவியில்.....

உயிர்வலி....

மனம் மரத்து தான் போகிறது
உயிர்விடும் வழி தேடுகிறது
வலியும் வேதனையும் கூடுகிறது
வேண்டாததை நினைக்க வைக்கிறது

சம்மட்டி அடி இதயத்தில் அறைகிறது
உடம்பு மேலும் கனத்து போகிறது
உயிர் உடலை துறந்துவிட
மனதிடம் பேராசையோடு யாசிக்கிறது

திருவிளையாடல் இவ்வளவுதானா?
இறைவனை நோக்கி தொழுகிறது
கைகள் பின்னப்பட்ட நிலையிலும்
முறையிட்டு அழுது தொலைக்கிறது

பண்பட்ட மனதாயிருக்க முயல்கிறது
முடியாததால் கண்ணீர் கரைபுரள்கிறது
இனியும் உயிரோடு இருக்கப்பிடிக்காது
உயிர்வலி போகும்வரை கதறிதீர்க்கிறது

என்றும் இணைந்திருப்போம்..

ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொண்டு
ஒருவர் மூச்சை
ஒருவர் உண்டு

கனவுகளை அழகாய்
சுமந்துக்கொண்டு
கற்பனை வானில்
மிதந்துக்கொண்டு

நம்மை நாமே
நன்றாய் ரசிப்போம்
நம் காதலை என்றும்
மறக்காதிருப்போம்

நம் கடமைகளில்
மூழ்கி இருப்போம்
அன்பால் இருவரும்
என்றும் இணைந்திருப்போம்...

ஆசை ஆசை....

ஆசை ஆசை....
உன் வசமாகிவிட ஆசை
உன் மனதில் என்றும்
இருந்து விட ஆசை

அன்பால் உன்னை
வளைத்துவிட ஆசை
உன் மூச்சை
கொஞ்சமே சுவாசிக்க ஆசை

உன் இதழில்
கவிதை வரைய ஆசை
உன் பாதம்
என் இல்லம் புக ஆசை

என் மனதில் நீ
என்றும் உறைந்திட ஆசை
வற்றாத அன்பை
நாம் பகிர்ந்துவிட ஆசை

என் காதலை
உன் காதில்
கிசுகிசுக்க ஆசை

கேட்டதும் நீ
நாணி தலைகுனிவதை
கண்டிட ஆசை

காதலுடன் நீயும்
என்னை ஏற்றுக்கொள்ள
ஆசை

ஒரு காதலின் பயணம்....!

நட்பாய் தொடங்கி காதலாய் கசிந்துருகி
ஏக்கங்களே கனவுகளாகி
கண்ணீரோடு விடைபெற்றது
கன்னிக்காதல்...

பட்டம் பெற்றுவிட
தொட்டுவிடும் தூரம்தான்
என்றெண்ணி தொடர்ந்த
கல்லூரிவாழ்க்கையில்
இடம்பெறவில்லை
பருவக்காதல்....

உலகமறியாப்பருவத்தில்
அனுபவம் கற்கா வயதில்
கணவனோடு இணைத்தது
கல்யாணக்காதல்...

பிள்ளைகள் வளர்ந்த வேகத்தில்
திறமைகளை மறந்த நேரத்தில்
சுயமுகவரி தொலைத்து
பொறுமையாய் காத்திருந்தது
அன்புக்காதல்...

அன்புகூடிய அந்த கணங்களில்
சுயநலம் கொண்ட பிள்ளைகள்
வேண்டாமென ஒதுக்கிய பெற்றோரை
வாரி அணைத்தது
முதுமைக்காதல்...

கர்ப்பக்குழந்தையின் கதறல்..

விந்தை உலகம்
மொந்தைக் கள்ளாய்
பழமையைக் கொண்டாடும்
பழமைவாதிகளும்
புதியதை படைக்கும்
புதுமை விரும்பிகளும்

வரதட்சணையால்
வரன் தொலைத்த
பேரிளம்பெண்களும்
காதலைப்பேசி
காசைக் கரியாக்கும்
இன்றைய விடலைகளும்

கழுத்தை இறுக்கும்
லஞ்சமும் ஊழலும்
பொதுவாய் வந்து
பாவமாய் ஓட்டுப்போட்டு
விலகும் பொதுஜனமும்
மனைவியின் காசில்
வெட்டிப்பொழுதை
போக்கும் கனவான்களும்

வட்டித்தின்று
வயிற்றை வளர்க்கும்
ஈட்டிக்காரர்களும்

அழும் குழந்தைகளுக்கு
கள்ளிப்பாலால் அமுதூட்டி
வறுமைக்கு பெண்குழந்தையை
பரிதாபமாய் பலியாக்கி

கல்லுக்கு அபிஷேகம் செய்து
செய்யும் திருட்டுக்கெல்லாம்
இறைவனை உடந்தையாக்கும்
இன்றைய அரசியல்வாதிகளும்

ஐயோ அம்மா
வேண்டாம் வேண்டாம்
இந்த உலகம் காணும்
கொடிய பிறப்பு
எனக்கு வேண்டாம்

மூச்சை இறுக்கி
என்னை உன்னுள் வைத்து
அமிழ்த்தி சுகமாய்
இரு(ற)க்க விடு அம்மா..

சுவாசமாய் நிலைப்பேன் என்றும் உன்னோடு....

அன்பு பூசிய உறவு
நீடித்து என்றும் நிலைப்பதுண்டு
பண்பு இல்லா உறவு
வம்பு வந்து விலகுவதுமுண்டு

விருப்பப்பாடல்கள் கேட்டு
விரும்பிய கருத்துகள் பகிர்ந்து
விண்ணில் நீயும் பறந்து
விலகியது நாணமும் சிறிது

கவிதையில் காதல் கதைத்து
பொய்ப்பேசும் கண்களை தவிர்த்து
வாசமுடன் உன்னை அணைத்து
உன்னை என்றும் என்மனதில் வைத்து

உயிராய் தினமும்  பூஜித்து
ஜனனம் மீண்டும் எடுக்காது
உன்னிடமே சங்கமமாகி இறுதியில்
சுவாசமாய் நிலைப்பேன் என்றும் உன்னோடு.....

மூச்சு நின்றுவிடுமுன்...

காக்கவைத்து என்னை
வேதனைப்படுத்தாதே
நொடிகள் நிமிடங்களாகி
நிமிடங்களும் இதோ
கரைந்துக்கொண்டே....

காத்திருக்கும் நேரமெல்லாம்
மனதைக் கொத்தும்
உன் நினைவுகளை
இதமாய் கோதிவிடுகிறேன்

இனியவையும் உண்டு
வருந்தியவையும் உண்டு
விளையாட்டாய் நாம்
பிணங்கியதும் உண்டு

உன் நினைவுகளை உண்டு
அவை தீருமுன் நீயும்
என்னெதிரே வந்துவிடு

காக்கவைத்து என்னை
வெற்றிக்கொள்ள நினைக்காதே

உன்னைக் காணாது தவித்து
என் மூச்சு நின்றுவிடுமுன்
வந்துவிடுவாய் தானே?

நூலிழை சுவாசத்தில்?

இத்தனை சக்தியா
நீ காட்டிய
நேசத்துக்கு?

என் சுவாசத்தை
இத்தனை நாள்
கட்டுப்படுத்தியது
நீதானா?

பிரிவு எனும் சொல்
சுவாசத்தை
தடை செய்யுமா?

அடங்கிக்கொண்டிருக்கும்
நூலிழை சுவாசத்தில்
துடிக்கவைக்கமுடியுமா?

உன்னை நினைக்கவைக்கமுடியுமா?
நெஞ்சை மிக பலமாய்
அடைக்கச்செய்யுமா?

அத்தனை சக்தியா
உன் நேசத்துக்கு?

எங்கோ இருந்துக்கொண்டு
உன் நேசத்தினால் என்னை
வாழவைக்கமுடியுமா?

கட்டுப்படுத்திய சுவாசம்
தடையில்லாமல்
உன்னுடனே கலக்க
அத்தனை அற்புதமா
நேசம்?

நீ என் அருகில்...

நீ என் அருகில் இருக்கும் நேரம்
என்னை மறக்கிறேன்
என்பது உண்மை

என் துன்பங்கள்
என்னை விட்டு
தூரப்போவதும் உண்மை

என் சந்தோஷங்கள்
மொத்தவடிவாய்
உன்னுருவில்
வந்தது உண்மை

அது என்றும் நிலைத்திருக்க
நீ என் அருகில்
என்றுமிருக்க
என் வேண்டுதல்
உன்னிடத்து
அதுவும் உண்மை

நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்....

ஆயுட்காலம் பத்துவருடமாம் ஜோசியனின் கூற்று இது
வாழவே விரும்பாத எனக்கு
பத்துவருடமும் அதிகமே

கடமைகள் முடிக்க கொடுத்த கணக்கா
விட்டதை சரியாக்க கொடுத்த சந்தர்ப்பமா
விதியின் வழியில் செல்ல அச்சுறுத்தலா
உடலை உருக்கிப்பின் கொண்டுசெல்லவா?

சொந்தமும் நட்பும் பரிதாபம் கொள்ளவோ
பெற்ற குழந்தைகளுக்கு ஒரு சுமையாகவோ
வேண்டாதவருக்கு ஒரு பாரமாகவோ
வேண்டியவருக்கு கொடுத்த துன்பமோ

வயோதிகரை வணங்கி மூத்தோரை பணிந்து
இளையோரிடம் கருணையுடன் கனிவுகாட்டி
கொடுத்த கடமைகளை நன்றாய் முடித்து
தொடங்கவேண்டும் எனக்கான பயணத்துக்கு

மனிதவாசமில்லா வனாந்திரத்தில்
இறையை நினைத்து தொழுதுக்கொண்டே
என்னுயிர் மெல்ல பிரிந்துச்செல்ல
பிணம்தின்னி கழுகுகள் வானத்தில் வட்டமிட

வாழ்ந்த வாழ்க்கைக்கும் ஒர் அர்த்தமாகி
கூட்டை விட்டு பிரியட்டும் ஆத்மா
விட்டுச்சென்ற உடல் நாய்நரிக்கு உணவாகி
எஞ்சிய மிச்சங்கள் மண்ணுக்கு உரமாகட்டும்

உடல் உயிர் பாவம் புண்ணியம்
எல்லாம் பூமியில் தொலைத்து
அழுக்கற்ற ஆத்மாவாய் சுத்தமாய்
அஞ்ஞானத்தில் மிதந்து காற்றோடு கலந்து

இறையே இனிபிறவி என்றும் வேண்டாம்
பழிசுமந்து வாழும் நிலை வேண்டாம்
சூதும் வாதும் கற்க வேண்டாம்
உன் பாதம் தொடும் மண்ணாய் இருந்திட அருள்புரி

பிணக்கு.....

தத்தி தவறி வந்த தவறான வார்த்தைகள்
தளிர்நடை போடுமுன் மௌனமாகிவிட்டது

முகம் காட்ட மறுத்த நொடியிலும் தளராது
அவசியமற்ற வார்த்தைகள் வெளிவரதுடித்தது

ஊடல் கூடலாவதும் கூடல் ஊடலாவதும்
இயந்திர உலகில் சகஜமாகி போனது

புரிதல் இல்லாத இடங்களில் எப்போதும்
சலசலப்புகளுக்கு பஞ்சமில்லாமல் ஆனது

வார்த்தைகள் தடித்து வெடித்து சிதறியது
மௌனம் கட்டோடு விடுபட்டு போனது

அன்பு இதில் எங்கே மறைந்துவிட்டது
காதல் இங்கே எங்கே ஒளிந்துக்கொண்டது

சமாதானத் தூதுவிட நினைவுகள் உதவட்டுமே
பிணக்கு தீர்ந்து காதல்மீண்டும் தொடரட்டுமே....
Related Posts Plugin for WordPress, Blogger...